வாழைத்தண்டு கூட்டு

வாழைத்தண்டு கூட்டு


தேவையானப்பொருட்கள்:

வாழைத்தண்டு - 1 (ஒரு அடி நீளம்)
பயத்தம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
அரிசி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

வாழைத்தண்டை வட்ட வில்லைகளாக வெட்டி, அதிலுள்ள நாரை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய துண்டுகளை சிறிது மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

பயத்தம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேக வைத்தெடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில், வாழைத்தண்டு துண்டுகளைப் போட்டு, அதில் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு போட்டு அத்துடன், வாழைத்தண்டு மூழ்கும் அளவிற்கு தேவையான நீரைச் சேர்த்து வேக விடவும். வாழைத்தண்டு நன்றாக வெந்ததும் அத்துடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இதற்கிடையில், தேங்காய்த்துருவல், சீரகம், அரிசி ஆகியவற்றை மைய அரைத்து, கொதிக்கும் கூட்டில் சேர்த்துக் கிளறி விடவும்.

கூட்டு மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, கடுகு, மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.

சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். அல்லது காரகுழம்பு மற்றும் ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement