வாழைத்தண்டு பொரியல்


தேவையானப்பொருட்கள்:

வாழைத்தண்டு - 1 (1 அடி நீளம்)
காய்ந்த மிளகாய் - 2
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வாழைத்தண்டை, மெல்லிய வில்லைகளாக நறுக்கி, அதிலுள்ள நார்களை நீக்கி விட்டு, நீளத்துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போடவும். (தண்ணீரில் சிறிது மோரை ஊற்றி அந்த நீரில் போடவும். இது வாழைத்தண்டு கறுக்காமல் இருக்க உதவும்).

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் உளுத்தம் பருப்பையும், மிளகாயையும் (மிளகாயைக் ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும்) போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் கறிவேப்பிலையைச் சேர்த்து சற்று வதக்கியப் பின்னர், அதில் வாழைத்தண்டைச் சேர்த்து, உப்பு போட்டு அத்துடன் ஒரு கையளவு நீரைத் தெளித்துக் கிளறி விடவும். மூடி போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். வாழைத்தண்டு நன்றாக வெந்து, அதிலுள்ள நீரும் வற்றியதும், தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கவும்.

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement